சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் அந்தப் படத்தில் நடித்துள்ள இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் கலந்துகொண்டார்இயக்குநர் பார்த்திபன் விழாவில் பேசும்போது, “போன வாரம் பார்த்த படம் பழகிவிட்டது; போன மாதம் கேட்ட கதை பழையதாகி விட்டது. ஆனால், பல ஆண்டுகளாக நடந்த கதை கல்கியின் எழுத்தால் சரித்திரமாக மாறிவிட்ட இந்த படைப்பு, அவருடைய கனவை இன்று கலக்கி இருக்கிறார் மணிரத்னம் அவர்கள்.நான் பேசும்போது நீங்கள் கை தட்டி பாராட்டுவதுபோல் இன்று கல்கி இருந்திருந்தால் மணிரத்னம் அவர்களை கை தட்டி பாராட்டியிருப்பார். மணிரத்னத்திற்கு சுஹாசினிக்கு முன்பு ஒரு காதல் இருந்திருக்கிறது. அது இந்த ‘பொன்னியின் செல்வன்’ என்று நினைக்கிறேன். அப்படி காதல் இல்லை என்றால் இந்த படத்தை நிச்சயம் அவர் செய்திருக்க முடியாது. இந்தப் பொன்னியின் செல்வனில் கடைசி புள்ளி எழுத்து நான்தான்.நடிக்கவே வராதவர்கள்கூட மணி சாரிடம் நடிக்க வந்தால் நடித்துவிடுவார்கள். இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும், ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் நாம் தூய தமிழில் பேசினோம். ஆகையால், நமக்கு தமிழ் நன்றாக பேச வரும் என்று இறுமாப்புடன் சென்றேன்.ஆனால், அங்கு சென்றதும் ஒரு மாப்புகூட வேலை செய்யவில்லை. முதல் நாள் படப்பிடிப்பிலேயே மணிரத்னம் சார் அவ்வளவு தூய தமிழில் எல்லாம் பேச வேண்டாம் என்று கூறி மட்டம் தட்டினார். மட்டம் தட்டுவது என்றால் தமிழில் இரண்டு அர்த்தம் இருக்கிறது. கேவலப்படுத்துவது என்று ஒரு அர்த்தம், இன்னொன்று கட்டடம் கட்டுவதற்காக மட்ட பலகையை வைத்து சுவரை சமன்படுத்த பயன்படுத்துவதுதான் மட்டம் தட்டுவது என்பது. அதைத்தான் மணிரத்னம் சார் செய்தார்.பல வருட காலமாக செயல்படுத்த முடியாத இந்தக் கனவு படத்தை நனவாக்கிய லைகா புரொடக்க்ஷன்ஸ் சுபாஸ்கரன் அவர்களுக்கு பெரிய நன்றி. லைகாவின் பயணத்தில் இந்தப் படம் முக்கியமான ஒன்றாக இருக்கும். உலக அழகி ஐஸ்வர்யா ராய் இந்தப் படத்தில் நந்தினியாக நடித்திருக்கிறார் என்று கூறுவதைவிட, இந்தப் படத்திற்காக தன்னை அர்ப்பணித்திருக்கிறார் என்று கூறுவதுதான் சரியாக இருக்கும்…” என்றார்.
Sign in