மழையில் நனைகிறேன்- திரைப்பட விமர்சனம்

கத்தி,அரிவாள்,துப்பாக்கி ஆகியனவற்றோடு இரத்தம் தெறிக்கத் தெறிக்க படமெடுத்தால்தான் ஓடும் என்று நம்பிக் கொண்டிருக்கிற காலத்தில் முற்றிலும் காதலைப் போற்றும் படமாக வந்திருக்கிறது “மழையில் நனைகிறேன்”நாயகனுக்கு நாயகி மீது காதல்.நாயகிக்கு அதில் விருப்பமில்லை.ஆனாலும் நாயகன் விடாமுயன்று நாயகியை வெல்கிறார்.அதன்பின் ஒரு பெரும் சோகம்.அது என்ன? அதன் முடிவென்ன? என்பதுதான் திரைக்கதை.நாயகனாக நடித்திருக்கும் அன்சன்பால்,பணக்கார வீட்டுப் பையன் வேடத்துக்கு  பொருந்தியிருக்கிறார்.ஜாலியான இளைஞனாக நடமாடும் அவருக்குள் காதல் வந்ததும் ஏற்படும் மாற்றங்களைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகியாக ரெபா ஜான்,இளமையும் அழகும் துள்ள நடித்திருக்கிறார்.பொறுப்பான நடிப்பில் துடிப்பையும் காதல் வந்த பின் நாணத்தையும் சரியாகக் காட்டியிருக்கிறார்.

நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் மேத்தீவ் வர்கீஸ், அம்மாவாக நடித்திருக்கும் அனுபமா குமார், நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் சங்கர் குரு ராஜா, நாயகனின் நண்பராக நடித்திருக்கும் கிஷோர் ராஜ்குமார், வெற்றிவேல் ராஜா உள்ளிட்டோர் அவரவர் வேடத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

விஷ்ணு பிரசாத்தின் இசையில் பாடல்கள் கேட்க இதமாக அமைந்திருக்கிறது. பின்னணி இசை திரைக்கதையின் தன்மைக்கேற்ப இசைந்திருக்கிறது.

ஜெ.கல்யாண் ஒளிப்பதிவில் காதல் காட்சிகள் வண்ண மயமாக இருக்கின்றன.அதற்குப் பிறகான சூழலின் இறுக்கமும் காட்சிகளில் வெளிப்பட்டுள்ளது.

விஜி மற்றும் கவின் பாண்டியன் ஆகியோர் வசனங்கள் எழுதியிருக்கிறார்கள்.நீ நினச்சா பல கார்களை வாங்கலாம், ஆனால் ஐயங்கார் மட்டும் போதும்னு முடிவு பண்ணிட்ட என்பது உள்ளிட்ட பல வசனங்களில் வரவேற்புப் பெறுகிறார்கள்.

கதை எழுதி இயக்கியிருக்கிறார் டி.சுரேஷ் குமார்.இளமை துள்ளும் காதல் கதையை படமாக்கியிருப்பதோடு அதற்குள் மத வேறுபாடு தொடர்பான விசயங்களையும் வைத்து கவனிக்க வைத்திருக்கிறார்.