வதந்திகளைப் பொய்யாக்கி தொடங்குகிறது சிம்பு படம்

அமைதிப்படை-2, கங்காரு ஆகிய படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், தற்போது மிக மிக அவசரம் என்கிற படத்தைத் தயாரித்துள்ளது.

விரைவில் இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில், இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க, ‘மாநாடு’ என்கிற படத்தை இந்த நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் கதாநாயகியாக பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருக்கிறார்.

இவர்கள் தவிர இன்னும் சில முன்னணி நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் இடம்பெறுகின்றனர். யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் அதிரடி அரசியல் படமாக இந்தப்படம் உருவாகிறது. சிம்பு இதுவரை நடித்த படங்களிலேயே படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் அறிவிக்கப்பட்டு பல நாட்கள் ஆனதால் படம் அவ்வளவுதான் டைட்டில் அறிவிப்போடு கைவிடப்பட்டது என்றெல்லாம் சிலர் செய்திகளை பரப்பி வந்தனர். ஆனால் படப்பிடிப்பை துவங்குவதற்கான பக்காவான முன்கட்ட தயாரிப்பு பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுவந்ததை அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை.

அவர்களின் நினைப்பை எல்லாம் தவிடு பொடியாக்கும் விதமாக, வரும் ஜூன்-25ஆம் தேதி மலேசியாவில் பாடல் காட்சியுடன் முதல்கட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. பாடலுடன் சில முக்கியமான காட்சிகளும் அங்கே படமாக்கப்பட உள்ளனவாம்.