‘டியூட்’ திரைப்படவிமர்சனம் – ஹாட்ரிக் அடிப்பாரா பிரதீப்

கோமாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆன பிரதீப் ரங்கநாதன்,  ஜென் ஸீ தலைமுறையினரின் மனநிலையைசரியாக பிடித்து, அதை அவர்களுக்கானதாக மட்டுமின்றி எல்லா தரப்பினரும் ரசிக்கும் வகையிலான திரைக்கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார்  பிரதீப் ரங்கநாதன். அது அவர் இயக்கும் படமாக இருந்தாலும் சரி, நடிக்கும் படமாக இருந்தாலும் சரி. அந்த வகையில் இந்த ‘டியூட்’ படமும் பிரதீப்பின் பயணத்தில் மற்றொரு படம் என்றுதான் சொல்லவேண்டும்.

பிராங்க் மற்றும் சர்ப்ரைஸ் கொடுக்கும் நிகழ்வுகளை நடத்தும் நிறுவனம் வைத்திருப்பவர் அகன் (பிரதீப் ரங்கநாதன்). அவரை விரும்புவதாக கூறும்  அவரது மாமா மகள் குறளரசியின் காதலை (மமிதா பைஜு) நிராகரிக்கிறார். இதனால் மனமுடையும் அவர் மேற்படிப்புக்காக வெளியூருக்கு சென்று விடுகிறார்.

இந்த இடைவெளியில் மீண்டும் குறளரசி மீது காதல் கொள்ளும் அகன், இதை தனது மாமாவும் அமைச்சருமான அதியமானிடம் (சரத்குமார்) சென்று சொல்கிறார். உடனடியாக சம்மதம் தெரிவிக்கும் அவர், திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார்.

திருமணம் நடக்கும் தினம் அன்று, இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லையென்றும், தான் வேறு ஒருவர் மீது காதலில் விழுந்துவிட்டதாகவும் அகனிடம் சொல்கிறார் குறள். திருமணம் நின்றதா? அதன் பிறகு என்ன ஆனது என்பதே ‘டியூட்’ படத்தின் திரைக்கதை.

படத்தின் டைட்டில் கிரெடிட்ஸ் தொடங்கும்போதே கதையும் தொடங்கிவிடுகிறது. தனது முன்னாள் காதலியின் திருமணத்துக்கு வரும் பிரதீப் செய்யும் அலப்பறைகளும் அதனூடே டைட்டிலை அறிமுகம் செய்த விதமும் பக்கா தியேட்டர் மெட்டீரியல். அதிலும் மாப்பிள்ளையிடம் பிரதீப், “தாலியை டைட்டா கட்டியிருக்கக் கூடாதா ப்ரோ?” என்று கேட்கும் இடமெல்லாம் அரங்கம் அதிர்கிறது.

இதுபோல படம் முழுக்க பிரதீப் ரங்கநாதனுக்காகவேபல காட்சிகளை எழுதி இருக்கிறார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன். ஜென் ஸீ தலைமுறையினரை மனதில் வைத்து எழுதப்பட்ட கதையாக இருந்தாலும் இந்த 2025 காலகட்டத்திலும் சாதி எப்படி தன் கோர முகத்தை காட்டுகிறது என்பதை எந்தவித பிரச்சார நெடியும் இல்லாமல் நச் என்று சொன்ன விதத்துக்காக இயக்குநரை  பாராட்டலாம்.

குறிப்பாக இடைவேளைக்கு முன்னால் சரத்குமாரிடம் மமிதா பைஜு பேசும் இடம் தொடங்கி இடைவேளை வரை வரும் காட்சிகள் எழுதப்பட்ட விதம் சிறப்பு.  நகைச்சுவை நன்றாக கைகொடுத்திருக்கிறது. படத்தின் பெரும் பலமும் அதுதான்.

பிரதீப் ரங்கநாதனின் உடல் மொழிக்காகவே தனி ரசிகர் கூட்டம் உருவாகிவிட்டதைப் போல அவர் செய்யும் ஒவ்வொரு விஷயத்துக்கும் ஆரவாரம் எழுகிறது. மமிதா பைஜுவுக்கும் கனமான கதாபாத்திரம், அதை அவரும் உணர்ந்து திறம்பட செய்திருக்கிறார்.

படத்தின் மற்றொரு நாயகன்

சரத்குமார் என்று சொல்லும் அளவுக்கு, தான் வரும் ஒவ்வொரு காட்சியிலும், க்ளைமாக்ஸில் எமோஷனல் முகம் காட்டியும் ரசிக்க வைக்கிறார். பரிதாபங்கள் திராவிட் செல்வம், ரோஹினி, நாயகியின் காதலராக வருபவர் என அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

சாய் அபயங்கரின் இசையில் ‘ஊரும் ப்ளட்’ ஏற்கெனவே ஹிட். அது படத்தில் வைக்கப்பட்ட இடம் நன்றாக இருக்கிறது. மற்ற பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசை மூலம் படத்துக்கு வலு சேர்த்துள்ளார். நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு ஒரு கமர்ஷியல் படத்துக்கான கலர்ஃபுல் காட்சிகளை தந்திருக்கிறது.
நாயகியும் அவரது காதலரும் பிரதீப் குறித்து பேசுவதாக வரும் காட்சியும், அதை திராவிட் செல்வம் செல்வம் கேட்பதும் நல்ல டெக்னிக்.

சில குறைகளைத் தாண்டி தீபாவளி விடுமுறையில் கலகலப்பான, கொண்டாட்ட மனநிலையுடன் இரண்டரை மணி நேரத்தை செலவிட விரும்புவோர் தாராளமாக சென்று பார்க்கக் கூடிய படமாக வந்துள்ளது  ‘டியூட்’.