கட்டா குஸ்தி மூன்றாம் பாகம் தயாராகிறது- இயக்குநர் செல்லா அய்யாவு

விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில்,இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வெளியாகி 50 நாட்களைக் கடந்து  ஓடிக்கொண்டிருக்கிறது.இப்படத்தை,வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
படக்குழுவினர் 50 ஆவது நாள் வெற்றிவிழா மற்றும் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியை செப்டம்பர் 3 ஆம் தேதி சென்னையில்  நடத்தினர்.

இந்தநிகழ்வில்நடிகர்கள்,

தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவைச் சேர்ந்தவர்களை கௌரவிக்கும்விதமாக அவர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வினில் இயக்குநர் செல்லா அய்யாவு பேசுகையில்…

கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி ‘கட்டா குஸ்தி 2’ படத்திற்குப் பூஜை போட்டு படப்பிடிப்பைத் தொடங்கினோம்.இன்று செப்டம்பர் 3-ஆம் தேதி,படம் வெளியாகி 50 நாட்கள் ஓடிய வெற்றியைக் கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஒருபடம் தொடங்கி,ஒரு ஆண்டுக்குள் வெளியாகி,50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடுவது பெரிய விசயம்.இந்த வெற்றியை வழங்கிய ரசிகர்களுக்கும்,படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.முன்பெல்லாம் 100, 175, 200 நாட்கள் ஓடிய படங்களின் விளம்பரங்களைப் பத்திரிகைகளில் பார்ப்பது வழக்கம்.காலப்போக்கில் திரையரங்கு வெளியீட்டு முறைகளும்,ரசிகர்கள் படம் பார்க்கும் தளங்களும் மாறிவிட்ட நிலையில்,‘கட்டா குஸ்தி 2’ 50 நாட்களைக் கடந்துள்ளது எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது,
இந்த வெற்றியை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருடனும் இணைந்து கொண்டாடி,அவர்களுக்கு சீல்டு வழங்குவது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியான தருணம்.எனது உதவிஇயக்குநர் காலத்தில் ஒரு படத்தின் வெற்றிக்காக எனக்குக் கிடைத்த நினைவுப்பரிசை புகைப்படத்துடன் சேர்த்து வீட்டில் வைத்திருந்தேன்.பல ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநராக நான் உருவாக்கிய படம் 50 நாட்கள் ஓடி,மீண்டும் ஒரு வெற்றிக்கான நினைவுப்பரிசைப் பெறுவது தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது.இந்த சீல்டை எனது வீட்டிற்கு எடுத்துச்சென்று,அந்த பழைய நினைவுப்பரிசுக்கு அருகில் வைக்கப்போகிறேன். அதனால்தான் இந்த தருணம் எனக்கு மிகவும் சிறப்பானதாகவும் உணர்வுபூர்வமானதாகவும் இருக்கிறது.
இந்தப்படத்தின் மீது ஆரம்பம் முதலே விஷ்ணுவிஷால் மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தார்.கதை எழுதுவதிலிருந்து நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்வு செய்வது,படப்பிடிப்பு,தயாரிப்பு,வெளியீடு மற்றும் விளம்பரப்பணிகள் என ஒவ்வொரு கட்டத்திலும் அவர் தீவிரமாகச் செயல்பட்டார்.ஒரு நடிகராக மட்டுமல்லாமல்,தயாரிப்பாளராகவும் இந்தப்படத்தை வெற்றிபெறச் செய்ய முழுமையான ஈடுபாட்டுடன் உழைத்தார்.இந்தப்படம் இன்று பெற்றுள்ள வெற்றியில் அவருடைய பங்கு மிக முக்கியமானது. அதேபோல்,‘கட்டா குஸ்தி’ ஒரு பிராண்டாக உருவாக முக்கியமான அடையாளமாக இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமியின் பங்களிப்பும் மிகப்பெரியது என்றார்.

விஷ்ணு விஷால் பேசுகையில்…..

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.பல படங்களுக்கு கிடைக்காத ஒரு வாய்ப்பு, ‘கட்டா குஸ்தி 2’படத்திற்கு கிடைத்திருப்பது சந்தோசம்.என்னைப் பொறுத்தவரை ரசிகர்கள்தான் ஒரு படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியமான சக்தி.அவர்களுக்குப் படம் பிடித்துவிட்டால் அதை எந்த உயரத்திற்குக் கொண்டு செல்வார்கள் என்பதற்கு ‘கட்டா குஸ்தி’ ஒரு சிறந்த உதாரணம்.
இந்தவிழாவில் கலந்துகொண்ட ரம்யா கிருஷ்ணன் மேடத்திற்கும் எனது சிறப்பு நன்றி.15 நிமிட சிறப்புத்தோற்றம் என்று முதலில் அவரிடம் கூறினேன்.காட்சிகளை அனுப்பிப் படிக்கச் சொன்னபோதும்,என் மீதான அன்புக்காகவே அவர் இந்தக்கதாபாத்திரத்தில் நடித்தார்.அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெற்ற வரவேற்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தப்படத்தின் உயிர்நாடியாக இருந்த ஜாராவை ரசிகர்கள் திரையரங்குகளில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினார்கள்.அவரும் இந்த வெற்றியின் முக்கியமான பகுதியாக இருக்கிறார்.இந்த வெற்றியைக் கொண்டாட அனைவரும் ஒன்றாக இருப்பது கூடுதல் மகிழ்ச்சி.ஐசரிகணேஷ் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி.இந்த வெற்றியை 50 ஆவது நாளில் கொண்டாடுவோம் என்று நான் அவரிடம் உறுதியளித்திருந்தேன்.தொடர்ந்து எங்களுக்கு அளித்துவரும் ஆதரவுக்கும்,ஒவ்வொரு நிகழ்ச்சியையும் சிறப்பாக நடத்தி இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக எடுக்கும் முயற்சிக்கும் நன்றி.சினிமாவில் வெற்றி கிடைப்பது எளிதான விசயம் அல்ல.அது அரிதாகக் கிடைக்கும் ஒன்று.அப்படி ஒரு வெற்றி கிடைக்கும்போது அதை முழுமையாகக் கொண்டாட வேண்டும் என்பதே என் எண்ணம்.இந்த நிகழ்வை சிறப்பிக்க வந்த அமைச்சர் ராஜ்மோகன் சாருக்கும் நன்றி.அதேபோல்,பிரபுதேவா சார் சிறுவயதில் இருந்தே எனது மனதின் மிகப்பெரிய இடத்தில் இருப்பவர்.‘சிக்கு புக்கு’ பாடலுக்கு நடனமாடி பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேன்.ஒருகாலத்தில் நடனக்கலைஞராக வேண்டும் என்பதே எனது ஆசை.கால் காயம் காரணமாக அந்தப் பயணத்தைத் தொடர முடியவில்லை என்றாலும்,பிரபுதேவா சார் எனது சிறுவயது முன்னுதாரணமாக இருந்தார்.அவரது பாடல்களையும் நடனங்களையும் பின்பற்றி வளர்ந்தவன் நான்.இன்று அவர் இந்தவிழாவில் கலந்து கொண்டது மிகப்பெரிய மகிழ்ச்சி.
செல்லா எனக்கு எப்போதுமே மிகவும் ஸ்பெஷலான இயக்குநர்.எனது திரைப்பயணத்தில் ஒரு இயக்குநருடன் நீண்டபயணம் அமைந்தது என்றால் அது செல்லாவுடன்தான்.அவரது வளர்ச்சி மிகவும் இயல்பாகவும் அழகாகவும் அமைந்து வருகிறது.அவர் இன்னும் நீண்டகாலம் இதேபோன்று சிறப்பான வெற்றிகளைப் பெறவேண்டும் என்று விரும்புகிறேன்.குறிப்பாக குடும்பரசிகர்களை திரையரங்குகளுக்கு அழைத்துவரும் இதுபோன்ற படங்களை தொடர்ந்து உருவாக்க வேண்டும்.இப்படிப்பட்ட இயக்குநர்கள் தற்போது மிகவும் குறைவாக இருக்கிறார்கள்.நல்ல குடும்பப்படங்களை தொடர்ந்து கொடுங்கள்.‘கட்டா குஸ்தி 3’ படத்தையும் விரைவில் உருவாக்கலாம்.என்றார்.

அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில்…..

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அனைவராலும் கொண்டாடப்படும் பத்மஸ்ரீ பிரபுதேவா மாஸ்டர் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி.அவருடன் பணியாற்றியபோது பல விசயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.படப்பிடிப்புத்தளத்தில் அவர் அமைதியாக இருப்பார்.ஆனால்,கேமரா முன்பு நின்றுவிட்டால் அந்தக் கதாபாத்திரமாகவே முழுமையாக மாறிவிடுவார்.அவரது தொழில்முறை அர்ப்பணிப்பும் ஒழுக்கமும் அனைவருக்கும் ஒரு பாடமாகும்.
எங்கள் தயாரிப்பாளர் ஐசரிகணேஷ் அண்ணன் ஒரு உண்மையான சினிமா காதலர்.அவருக்குள் எப்போதும் ஒரு குழந்தைத்தனம் இருக்கும்.யாராவது உதவிகேட்டால் உடனடியாக அதை நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கும் பெரியமனம் கொண்டவர்.சினிமா மற்றும் கல்வித்துறை என இரண்டிலும் தொடர்ந்து பல சேவைகளை செய்துவருகிறார்.‘கட்டா குஸ்தி 2’50 நாட்களைக் கடந்து ஓடுவது இந்தக் காலகட்டத்தில் மிகப்பெரிய சாதனை.இன்றைக்கு ஐந்து நாட்கள்,ஏன் ஒரு நாளில் ஐந்து காட்சிகள் வெற்றிகரமாக ஓடுவதே சவாலான சூழ்நிலையில்,50 நாட்கள் என்பது படக்குழுவுக்கு கிடைத்த பெரிய மணிமகுடம்.இப்படிப்பட்ட வெற்றிக்கு விஷ்ணுவிஷால் போன்ற கடினஉழைப்பாளியும்,படத்தின் மீது முழுமையான நம்பிக்கை கொண்ட நடிகரும் தேவை.தனது நடிப்புக்கு இணையாக சகநடிகர்,நடிகைகள் சிறப்பாக நடிக்கவேண்டும் என்பதையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் அவரது மனதை நான் பாராட்டுகிறேன். படத்தின் ஒவ்வொரு விசயத்திலும்,குறிப்பாக விளம்பரப் பணிகளிலும் அவர் காட்டிய அர்ப்பணிப்பு அபாரமானது.
ஐஸ்வர்யா லட்சுமி இந்தப்படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார்.அவருடன் சிறுமி ஜாராவின் பங்களிப்பும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது.இவ்வளவு திறமையான கலைஞர்கள் மத்தியில் அவர் காட்டிய தன்னம்பிக்கையும் நடிப்பும் பாராட்டுக்குரியது. இந்த வெற்றிக்கு மிக முக்கியமானது.இசையமைப்பாளர் ஷான்ரோல்டனின் இசை,மல்யுத்தக் காட்சிகளை சிறப்பாக உருவாக்கிய ஸ்டண்ட் குழு,அதை தத்ரூபமாகப் பதிவு செய்த ஒளிப்பதிவாளர்,சிறப்பாக வடிவமைத்த எடிட்டர் என ஒவ்வொருவரின் உழைப்பும் படத்தின் பலமாக அமைந்துள்ளது.அந்த அனைவரையும் மேடைக்கு அழைத்து கௌரவிக்க வேண்டும் என்று நினைத்து இந்தவிழாவை நடத்தும் தயாரிப்பு நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் ஐசரிகணேஷ் ஆகியோருக்கும் என் வாழ்த்துகள் என்றார்.

நடிகர் யோகிபாபு பேசுகையில்….

அனைவருக்கும் வணக்கம்.இயக்குநர் செல்லா அய்யாவுவுடன் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தில் இருந்து தொடர்ந்து பயணித்து வருகிறேன்.அந்தப்படத்தில் எனக்கு முழுநீளக் கதாபாத்திரம் கொடுத்தவர்,இந்தப்படத்தில் சிறியபகுதியாக இருந்தாலும் முக்கியமான ஒரு இடத்தில் என்னை பயன்படுத்தியிருக்கிறார்.‘கட்டா குஸ்தி’முதல் மற்றும் இரண்டாம்பாகத்துடன் முடிந்துவிடும் என்று நினைத்திருந்த நிலையில்,மூன்றாம்பாகத்திற்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் இறுதியில் அந்த வசனத்தை வைத்தது செல்லா சாரின் திட்டம்தான்.அதற்காக அவருக்கு எனது நன்றி.
50 ஆவது நாள் வெற்றியைக் கொண்டாடுவது தற்போது மிகவும் அரிதாகிவிட்டது.இந்தப்படத்திற்காக 50 ஆவது நாள் விழாவை நடத்தி, கலைஞர்களைக் கௌரவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.இதேபோல் 100 ஆவது நாள் விழாவையும் கொண்டாடும் வாய்ப்பு கிடைக்கவேண்டும்.அனைத்து தயாரிப்பாளர்களும் தங்கள் வெற்றிப்படங்களுக்காக இதுபோன்ற விழாக்களை நடத்தி கலைஞர்களை அழைத்துக் கொண்டாடினால் மகிழ்ச்சியாக இருக்கும்.படப்பிடிப்பிலிருந்து நேரம் ஒதுக்கி இதுபோன்ற வெற்றி விழாக்களுக்கு வருவதும் எங்களுக்கு ஒரு மகிழ்ச்சிதான்.அமைச்சர் ராஜ் மோகன்,பிரபுதேவா மாஸ்டர்,ஐசரிகணேஷ் சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments (0)
Add Comment