இயக்குநர் வசந்தபாலனின் ‘அநீதி’ படப்பிடிப்பு நிறைவு

இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான ‘அநீதி’-யின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ’கைதி’ ’மாஸ்டர்’ படங்களில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த அர்ஜூன்தாஸ் முதன்முறையாக கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். ’சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் மாரியம்மாவாக நடித்து பெரும் கவனம் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.
விருதுநகரில் தன்னுடன் பள்ளியில் படித்த நண்பர்களான M.கிருஷ்ணகுமார், முருகன் ஞானவேல்,
வரதராஜன் மாணிக்கம் ஆகியோருடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை துவங்கி தயாரிப்பாளராக மாறியுள்ள வசந்தபாலனின் முதல் தயாரிப்பான ’அநீதி’ திரைப்படத்தை அவரே இயக்கியுள்ளதோடு, கதை, திரைக்கதையையும் எழுதியுள்ளார். இயக்குநர் வசந்தபாலனால் ’வெயில்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட G.V.பிரகாஷ்குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.பாடல்களை கார்த்திக் நேத்தா, ஏகாதேசி எழுதியுள்ளனர்.
வசந்தபாலனின் முந்தைய படங்களில் பாடல்கள் எழுதிய மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் நட்பின் நினைவாக நா.முத்துக்குமாரின் கவிதைகளிலிருந்து வரிகளைத் தொகுத்து ஒரு திரைப்பாடலுக்கு பயன்படுத்தியுள்ளார்.வனிதா விஜயகுமார்,’நாடோடிகள்’ பரணி,பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, விஜய் டிவி புகழ் ’அறந்தாங்கி’ நிஷா,காளி வெங்கட், சாரா, அர்ஜூன் சிதம்பரம், இயக்குநர் எஸ்.கே. ஜீவா,இயக்குநர் அருண் வைத்தியநாதன்,இயக்குநர் சுப்பிரமணிய சிவா மற்றும்  நாட்டிய கலைஞர் பத்மஸ்ரீ சாந்தா தனஞ்செயன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான,  அநீதி, ஜீன் மாதம் வெளியாகவுள்ளது.