வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி.கே.கணேஷ் தயாரித்துள்ள படம் குட்டி ஸ்டோரி. இந்தப் படத்தை முதல்முறையாக நான்கு முன்னணி இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ளனர்.முதல் தொகுப்பை கௌதம் வாசுதேவ் மேனன், இரண்டாவது தொகுப்பை விஜய், மூன்றாவது தொகுப்பை வெங்கட் பிரபு, நான்காவது தொகுப்பை நலன் குமாரசாமி ஆகியோர் இயக்கியுள்ளனர்.முதல்முறையாக 4 இயக்குநர்கள் 4 கதைகளை இயக்கி பெரிய திரையில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
இவற்றில் கௌதம் மேனன் இயக்கி உள்ள கதையில் அவரே நாயகனாக நடித்துள்ளா.ர் அவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார்.விஜய் இயக்கியுள்ள கதையில் மேகா ஆகாஷ் நாயகியாகவும் அமிர் டாஸ் பிரதான் ஆர்யா சுகாசினி ஆகியோர் நடித்துள்ளனர்.வெங்கட் பிரபு இயக்கியுள்ள கதையில் வருண் சங்கீதா சாக்ஷி ஆகியோர் நடித்துள்ளனர்.நலன் குமாரசாமி இயக்கியுள்ள கதையில் விஜய் சேதுபதி அதிதி பாலன் ஆகியோர் நடித்துள்ளனர்.குட்டி ஸ்டோரி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் (பிப்ரவரி 5,2021) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் டாக்டர்.ஐசரி.கே.கணேஷ் பேசுகையில்….
நீண்ட இடைவேளைக்குப் பிறகு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்தக் குறும்பட கான்செப்ட்டை என்னிடம் சொன்னவுடன் எனக்கு பிடித்தது. இது ஆந்தாலஜி மெத்தட் என்பதால் புதிதாகத் தோன்றியது. உடனே ஒப்புக்கொண்டேன். முதல் முறையாக நான்கு பெரிய இயக்குநர்கள் இணைந்து இதை உருவாக்கி உள்ளனர் என்றதும் இந்தப் படத்தின் மீதான ஈர்ப்பை அதிகப்படுத்தியது. இந்தப் படத்தை தியேட்டரில் வெளியிடுகிறோம். காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி படம் வெளியாகிறது பெரிய படங்களுக்கு இணையாக இதற்கும் பட்ஜெட் ஒதுக்கி எடுத்துள்ளோம் என்றார்.
இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன் பேசுகையில்….
நான் கொரோனா லாக் டவுன் காலகட்டத்தில் பல குறும்படங்களை இயக்கினேன். அதிலும் காதல் கதைப் படங்களை இயக்குவது பிடித்ததாக இருந்தது. இந்த கான்செப்ட் பற்றி என்னிடம் கூறியதும் முதலில் நான்கு இயக்குநர்களும் ஒன்றாகப் பேசி அவரவர் கதைகளை முடிவு செய்தோம். நான்கு கதைகளும் வித்தியாசமாக அமைந்தது. என்னுடைய கதையை நான்கே நாட்களில் படமாக்கினேன். கதாநாயகியாக அமலா பால் நடித்து உள்ளார். முதலில் நான் நடிப்பதாக இல்லை அதன்பிறகு கதையை முடித்தவுடன் நானே நடிக்க முடிவு செய்தேன். படம் நன்றாக வந்துள்ளது என்றார்.
இயக்குநர் விஜய் பேசுகையில்….
முதலில் நாங்கள் நான்கு பேரும் சேர்ந்து இதுபோன்ற ஒரு காதல் கதை படத்தை இயக்கப் போகிறோம் என்றதும் எதிர்பார்ப்பு அதிகமானது. மற்ற இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றும் போது அவர்களுடைய ஸ்டைலை என்னால் கற்றுக்கொள்ள முடிந்தது. இந்தக் கதையில் யாரை நடிக்க வைக்கலாம் என யோசித்தபோது மேகா ஆகாஷ் பொருத்தமாக இருப்பார் எனத் தோன்றியது. உடனே அவரிடம் கதையைச் சொன்னேன். அவரும் நடிக்க ஒப்புக் கொண்டு நடித்துக்கொடுத்தார். நான் ஏழு நாட்களில் இந்தக் கதையைப் படமாக்கினேன். முழுக்க முழுக்க சென்னையிலேயே எடுத்துள்ளோம் என்றார்.
இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில்…..
முதலில் நாங்கள் நான்கு பேரும் இணைந்து இந்த ஆந்தாலஜி படத்தை உருவாக்கி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும் என் கதை அனிமேஷன் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அதில் காதலும் கலந்து சொல்லியுள்ளேன். ஒரு குறும்படத்திற்குத் தேவையான எல்லா அம்சங்களும் இதில் உள்ளது. எனக்கும் இது ஒரு புது வித அனுபவத்தைத் தந்துள்ளது என்றார்.
இயக்குநர் நலன் குமாரசாமி பேசியதாவது…..
லாக் டவுன் முடிந்தவுடன் எனது புதிய படத்தைத் தொடங்கத் திட்டமிட்டு இருந்தேன். அதற்கு முன்பாக இந்தக் குறும்பட வாய்ப்பு வந்தது. எனக்கும் அந்தப் படத்துக்கு முன்னர் இதை இயக்கினால் என்னைத் தயார்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் ஒப்புக்கொண்டேன். இந்தக் கதையில் ஒருவரை நடிக்க வைக்க நினைத்து அவர் பற்றி விசாரிக்க என் நண்பர் விஜய் சேதுபதியைத் தொடர்புகொண்டே. அப்போது எதற்காகக் கேட்கிறீர்கள்? என்றார். இந்தப்படம் பற்றிச் சொன்னேன்.கதையைக் கேட்டுவிட்டு, எனக்கு இந்தக் கதை பிடித்துள்ளது நானே நடிக்கிறேன் என்று கூறி நடித்துக் கொடுத்தார். மற்ற இயக்குநர்கள் அவர்களுக்கான கதையை குறிப்பிட்ட நாட்களில் முடித்துக் கொடுத்தனர். நான் கொஞ்சம் அதிகமாக நாட்களை எடுத்துக்கொண்டேன். 11 நாட்கள் மிகவும் சிரமப்பட்டு இந்தக் கதையை முடித்தேன். ஒரு புது அனுபவத்தை தந்துள்ளது. இயக்குநர் கௌதம் மேனனும் படப்பிடிப்பின்போது சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து படப்பிடிப்பைப் பார்வையிட்டார். ஒரு சில காட்சிகளுக்கு விஜய் சேதுபதியும் உதவி செய்தார். நாங்கள் நினைத்தது போலவே இந்தக் கதை அமைந்துள்ளது
இவ்வாறு அவர் பேசினார்