கன்னட படத்தை கண்டு மிரளும் இந்தி திரையுலகம்

ஒரு கன்னடத் திரைப்படத்தைப் பார்த்து இந்தியத் திரையுலகமே பயப்படும் நாள் வரும் என சில வருடங்களுக்கு முன்பு யாராவது சொல்லியிருந்தால், அதைக் கேட்டவர்கள் சிரித்திருப்பார்கள். அவ்வப்போது கிச்சா சுதீப் போன்ற திரைக்கலைஞர்களைக் கொடுத்தாலும், பொதுவான சினிமா ரசிகர்களுக்கான படத்தைக் கன்னடத் திரையுலகம் கொடுக்கவில்லை. இதுவே ரசிகர்கள் கன்னட சினிமாவைப் பார்த்து சிரிக்கக் காரணமாக இருந்தது. ஆனால், இதையெல்லாம் உடைத்த ஒரு திரைப்படம் KGF.

KGF திரைப்படத்தின் புகழ் எந்தளவுக்குப் பரவியிருக்கிறது என்றால், அந்தப் படத்தின் ஷூட்டிங் இப்போதுதான் பாதி முடிந்திருக்கிறது; ஆனால், அதன் இந்தி திரைப்பட விநியோக உரிமையை ஏற்கனவே விற்றுவிட்டார்கள். இப்போது அந்த இந்தி விநியோகஸ்தரை வைத்தே தங்களுக்கான வேலைகளை முடித்துக்கொள்ளப் பார்க்கிறது இந்தி திரையுலகம். அதை தனது பயமாக வெளிப்படுத்திக்கொள்ளாமல் ஒரு வியாபாரமாக முடிக்கப்பார்க்கின்றனர்.

இந்தித் திரையுலகத்தின் திட்டப்படி KGF திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை உடனடியாக அறிவித்தால், அதற்கேற்ப அவர்களது திரைப்படங்களின் ரிலீஸை முடிவு செய்துகொள்ளலாம். ஒருவேளை முக்கியமான இந்தித் திரைப்படங்களுடன் KGF ரிலீஸாகி அவர்களது படம் தோற்றுவிட்டால் (KGF கண்டிப்பாக ஹிட் ஆகும்) ஏற்படக்கூடிய அவமானத்தைத் தவிர்க்க நினைக்கின்றனர்.
 அதுமட்டுமில்லாமல், இந்திய சினிமா முழுவதும் எதிர்பார்க்கும் மற்றொரு திரைப்படமான ராஜமௌலி இயக்கத்தில் என்.டி.ஆர் – ராம் சரண் நடிக்கும் RRR திரைப்படமும் 2021இல் ரிலீஸாகிறது. இந்தத் திரைப்படத்தை சங்கராந்திக்கு ரிலீஸ் செய்துவிடுவேன் என ராஜமௌலி உறுதிகொடுத்திருக்கிறார். இதனால், அந்த நேரத்தில் என் படத்தை ரிலீஸ் செய்யமாட்டேன் என KGF படத்தின் ஹீரோ யாஷ் ஏற்கனவே கூறிவிட்டார்.

KGF மற்றும் RRR ஆகிய இரு திரைப்படங்களுக்கு இடையே சிக்கிக்கொண்டு நம் பணத்தையும், மானத்தையும் இழந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது இந்தித் திரையுலகம். KGF மற்றும் RRR ஆகிய இரு படங்களையும் வாங்கியிருப்பது நடிகை ரவீணா தண்டனின் கணவர் அனில் தடாணியின் விநியோக நிறுவனமான AA Films. எனவே, படத்தை எப்போது ரிலீஸ் செய்யலாம் என்று அழுத்தம் கொடுத்து ராஜமௌலியிடமிருந்து அறிவிப்பை வாங்கி வெளியிட்டுவிட்டார்கள்.

ஆனால், KGF படத்தை எடுத்து வரும் யாஷ் தரப்பில் இவையெல்லாம் செல்லவில்லை. ‘நாங்கள் படத்தை எப்போது எடுத்து முடிக்கிறோமோ, அப்போதுதான் ரிலீஸ் செய்வோம். தேதியை முன்பே முடிவு செய்தால் அவசர அவசரமாகப் படத்தை எடுக்கவேண்டியதிருக்கும்’ என்று தேதியைச் சொல்ல யாஷ் தரப்பில் மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கின்றன பெங்களூர் குருவிகள். எது எப்படியிருந்தாலும் KGF மற்றும் RRR ஆகிய திரைப்படங்கள் இரண்டும் கமர்ஷியல் சினிமாவின் அடுத்த கட்டத்தை ரசிகர்களுக்குக் காட்டி, பாலிவுட் படங்களுக்கான அளவுகோலை உயர்த்தப்போகின்றன என்பது மட்டும் உறுதி.