லைகா தயாரிப்பில் மோகன்லால் நடிக்கும் எம்புரான்

மலையாள திரையுலகில் ஆசீர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் ஆகியோர் இணைந்து ‘எம்புரான்’ எனும் பெயரில் புதிய திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரானமோகன் லால் நடிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘லூசிபர்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தின் அடுத்த பாகம் குறித்த எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் இருந்தது.

லைகா நிறுவனம்

 ‘ எம்புரான் ‘ எனும் புதிய திரைப்படத்தை மலையாள திரையுலகின் பாரம்பரியமிக்க பட தயாரிப்பு நிறுவனமான ஆசீர்வாத் சினிமாஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. ‘எம்புரான்’ என பெயரிடப்பட்டிருக்கும் இப்படம் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறது என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் திரைக்கதையை முரளி கோபி எழுத, சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் தேவ் இசையமைக்கிறார்.
சுரேஷ் பாலாஜி மற்றும் ஜார்ஜ் ஃபயஸ் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றுகிறார்கள். இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகிறது.