மலையாளத்தில் 2024 பிப்ரவரி மாதம்வெளியான படம் மஞ்சும்மல் பாய்ஸ். 200 கோடி ரூபாய் மொத்த வசூலை எட்டிப் பிடித்த முதல் மலையாளப்படம் என்ற பெருமைக்குரிய இந்தப் படம் தமிழ்நாட்டில் பெரும் வெற்றியை பெற்றது. இதற்கு காரணம் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான குணா படத்தில் இடம்பெற்றுள்ள ‘கண்மணி அன்போடு காதலன்’ என்ற பாடல் இடம்பெற்றிருந்தது என விமர்சகர்களால் குறிப்பிடப்பட்டது.
இந்த பாடலை தனது அனுமதி இன்றி மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் பயன்படுத்தியதற்கு தயாரிப்பு நிறுவனத்துக்கு, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் “பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் பதிப்புரிமை சட்டப்படி பாடலின் முழு உரிமையாளர் என்பதால், முறையாக உரிமை பெற்று பாடலை பயன்படுத்த வேண்டும் அல்லது பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும், பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பபட்டது.
அதற்குமுறையான அனுமதி பெற்றுதான் படத்தில்பாடலை பயன்படுத்தியதாக மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பு தரப்பு விளக்கம் அளித்திருந்தது.
இந்த நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் பாடல் தொடர்பாக எழுந்த பிரச்சினைக்கு இளையராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எட்டப்பட்டதாக நேற்று ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இளையராஜா தரப்பில் 2 கோடி ரூபாய் இழப்பீடு கேட்கப்பட்டதாகவும், தயாரிப்பாளர் தரப்பில் இருந்து 60 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டு இந்த பிரச்னை முடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், இந்த செய்தியை இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சரவணன் மறுத்துள்ளார். தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இளையராஜாவுக்கு பணம் கொடுக்கப்படவில்லை என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இதேபோல், மஞ்சுமல் பாய்ஸ் படக்குழுவினரை தொடர்பு கொண்ட போது
“நாங்கள் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு இழப்பீடு வழங்க வேண்டிய அவசியம் கிடையாது. எங்கள் படத்தில் பயன்படுத்தப்பட்ட ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலுக்கு மியூசிக் மாஸ்டர் ஆடியோ அண்ட் வீடியோ, எல்.எல்.பி என்ற நிறுவனத்திலிருந்து முறைப்படி அனுமதி பெற்றுள்ளோம்.
அதேபோல், தெலுங்கு பாடலை பயன்படுத்த ஸ்ரீதேவி மியூசிக் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திடம் அனுமதி பெற்றுள்ளோம் எனக் கூறியுள்ளனர்.மேலும் இதுவரை இளையராஜாவிற்கு நாங்கள் எந்த ஒரு இழப்பீடு தொகையும் வழங்கவில்லை” என உறுதிப்படுத்தியுள்ளனர்.