வல்லமை – திரைப்பட விமர்சனம்

நல்லதோர் வீணைசெய்தே-
அதைநலங்கெடப் புழுதியிலெறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி-
எனைச்சுடர்மிகு மறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே

என்று இறையிடம் இறைஞ்சினார் பாரதியார்.

இப்படத்தில் நல்லதோர் வீணையான ஒரு சின்னஞ்சிறுமிக்கு ஏற்படும் துயருக்கு இறையிடம் கெஞ்சாமல் பாதிக்கப்பட்டவர்களே அதற்கு எதிராகப் போராடுகிறார்கள்.

மனைவியை இழந்ததால் தன் மகளுடன் சென்னை வருகிறார் பிரேம்ஜி.வீடு,வேலை,மகளின் படிப்பு என சராசரி வாழ்க்கை அவருடையது. சீராகப் போய்க் கொண்டிருக்கும் அவர்கள் வாழ்வில் பெரும் சிக்கல் அதை எவ்வாறு எதிர்கொண்டார்கள்? அதன் விளைவுகள் என்னென்ன? என்பதுதான் வல்லமை படத்தின் திரைக்கதை.

எந்நேரமும் குடி கூத்து என்று படங்களில் பார்த்த  பிரேம்ஜிக்கு இப்படத்தில் பெரும் பதவி உயர்வு.மிகப் பொறுப்பான தந்தை வேடம்.நான் இதற்கு சளைத்தவன் அல்ல என்று ஒவ்வொரு காட்சியிலும் நடித்திருக்கிறார்.ஒரு சாமானிய மனிதனாகவே வாழ்ந்திருக்கிறார்.

மனதை உலுக்கும் வேடத்தில் நடித்திருக்கிறார் சிறுமி திவதர்ஷினி.அவர் சும்மா நின்றாலே பதறுகிறது.தனக்கேற்பட்ட பாதிப்பு குறித்து அவரே சொல்லும்போது பதட்டம் கூடுகிறது.

காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் ’வழக்கு எண்’ முத்துராமன், காவலராக நடித்திருக்கும் சூப்பர் குட் சுப்பிரமணியம், தொழிலதிபராக நடித்திருக்கும் சி.ஆர்.ரஜித்,ஓட்டுநராக நடித்திருக்கும் சுப்பிரமணியன் மாதவன், பெட்ரோல் திருடும் இளைஞராக நடித்திருக்கும் விது, பள்ளி உதவிப் பணியாளராக நடித்திருக்கும் திலீபன் ஆகியோர் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜி.கே.வி,படத்துக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டுமே இசையமைத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் சூரஜ் நல்லுசாமி,சாதாரணமாகக் கடந்து போகக் கூடிய காட்சிகளையும் பார்ப்போர் மனதில் ஆழப்பதியும்படி காட்சிப்படுத்தியிருக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கிறார் கருப்பையா முருகன்.அவரே தயாரிப்பாளரும் கூட.

இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்த சினம்,சொல்லவந்த செய்தியின் கனம்,அதில் பிரேம்ஜியை நடிக்க வைத்த திடம் எனப் பலவற்றிலும் வியக்க வைத்திருக்கிறார்.