அடுத்தது விஷ்ணு விஷால் படமா..?” – ‘ஜீவி’ பட இயக்குநர் கோபிநாத் சொன்ன பதில்

கடந்த 2019-ல் வெளியாகி ரசிகர்களிடம் மட்டுமல்ல, விமர்சகர்களிடமும்கூட அருமையான படம் என்று பெயர் வாங்கிய படம் ‘ஜீவி’.

யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல் முதல் படத்திலேயே அனுபவமிக்க இயக்குநரை போல நேர்த்தியாக படத்தை உருவாக்கி இருந்தார் இயக்குநர் V.J.கோபிநாத். 
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் ‘ஜீவி 2’ என்கிற பெயரில் உருவாகி கடந்த ஆகஸ்ட்-19-ம் தேதியன்று ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

முதல் பாகத்தில் இடம் பெற்ற நாயகன் வெற்றி, நாயகி அஸ்வினி சந்திரசேகர், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ரோகிணி, மைம் கோபி, கருணாகரன், ரமா உள்ளிட்ட அனைவரும் இந்த இரண்டாம் பாகத்திலும் தொடர்கின்றனர் இவர்களுடன் ஒய்.ஜி.மகேந்திரனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திற்கும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இந்த ‘ஜீவி 2’ உருவாக்கம் குறித்து சில புதிய தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் V.J.கோபிநாத்“ஜீவி’ முதல் பாகம் வெளியான மறுநாளே நடிகர் விஷ்ணு விஷாலின் படத்தை இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டேன். ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக அவர் ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களின் படப்பிடிப்பு தள்ளிப் போனது.

“வேறு ஒரு படம்கூட இயக்கி விட்டு வந்து விடுங்களேன்” என அவர் கூறிய சமயத்தில், தயாரிப்பாளர் பிக் பிரிண்ட் கார்த்திக்தான், “நீங்கள் ஏன் ‘ஜீவி 2’வை உருவாக்க கூடாது..?” என இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான விதையை போட்டார்.இப்போது இரண்டாம் பாகம் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. “அடுத்ததாக விஷ்ணு விஷால் படத்தைதான் இயக்குவீர்களா?” எனப் பலரும் கேட்கிறார்கள். இப்போதும் அவருடன்  தொடர்பில்தான் இருக்கிறேன்.

அதே சமயம் அவர் முடிக்க வேண்டிய படங்களும் தாமதமாகி, இப்போதுதான் அந்த படங்களின் படபிடிப்பில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். அதனால்  அடுத்த படம் பற்றி இப்போது என்னிடம் எந்த யோசனையும் இல்லை. 

அதேசமயம் அடுத்தடுத்த படங்களுக்கான சில கதைகள் தயாராக இருக்கின்றன. அவற்றுக்கு பொருத்தமான நடிகர்களும் தயாரிப்பாளரும் கிடைக்கும்போது அதைத் துவங்கி விடுவேன்..” என்றார்.