ஜி.வி.பிரகாஷ்குமார் மனதை மாற்றிய 13 படம்

மெட்ராஸ் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால், அன்ஷு பிரபாகர் பிலிம்ஸுடன் இணைந்து தயாரித்துள்ள புதிய படம் ‘13’.இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், கவுதம் வாசுதேவ் மேனன் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  மேலும் ஆதியா, பவ்யா, ஐஸ்வர்யா, ஆதித்யா கதிர் உட்பட பலரும் நடித்துள்ளனர்.ஹாரர் கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குநர் கே.விவேக் இயக்கியுள்ளார்.இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் பிரசாத் லேப் தியேட்டரில் சமீபத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார், இயக்குநர் விவேக், தயாரிப்பாளர் நந்தகோபால் மற்றும் திரைப்படத்தின் நாயகிகள் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார் பேசும்போது, “என்னுடைய முதல் படமான ‘டார்லிங்’ ஹாரர் வகையில் எடுக்கப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு ஹாரர் திரைப்படங்களை நடிப்பதை தவிர்த்துவிட்டேன். தற்போதைய சூழலில் வாரம் ஒரு ஹாரர் திரைப்படம் வெளியாகிறது. அவை அனைத்தும் கிளிஷேவ் வகையில் உள்ளன.எனவே தயாரிப்பாளர் இந்தக் கதையை கேட்க வலியுறுத்தியபோது, ஹாரர் திரைப்படங்களில் நடிப்பதில்லை. குறிப்பாக ஹாரர்-காமெடி படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று கூறினேன். ஆனால் இந்தக் கதையை கேட்ட பிறகு உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்து நடித்தேன். அந்த அளவுக்கு கதை சுவாரஸ்யமாக இருந்தது…” என தெரிவித்தார்.தற்போது இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. படத்தின் பாடல் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.