நடிகர் விஜய்சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாமனிதன்’ திரைப்படம் 4-வது முறையாக ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு, புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மாமனிதன்படத்திற்காக முதல்முறையாக இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இந்தப் படத்திற்காக பணியாற்றியுள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இந்தப்படம், கொரோனா அச்சுறுத்தல் மற்றும் நிதி நெருக்கடி உள்ளிட்ட சில காரணங்களால் ரிலீசாகாமல் இருந்து வந்தது. இதையடுத்து ‘தர்மதுரை’ படத்தை தயாரித்த ஆர்.கே.சுரேஷ், ‘மாமனிதன்’ படத்தின் வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளார் இதனையடுத்து படத்தை வெளியிடும் வேலைகள் வேகம் பிடித்தன. இந்தப் படம் கடந்த மே 6-ந் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் விஜயசேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம், ஏப்ரல் 28-ம் தேதி வெளியாவதால், விஜய் சேதுபதியின் மற்றொரு படமான ‘மாமனிதன்’ படத்தின் வசூல் பாதிக்கும் என கருதிய படக்குழு, மீண்டும் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தது. அதன்படி, இந்தப் படம் மீண்டும் மே 20-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு, அதே தேதியில் உதயநிதி ஸ்டாலினின் ‘நெஞ்சுக்கு நீதி’ படம் வெளியாவதால், ‘மாமனிதன்’ திரைப்படத்திற்கு குறைந்த அளவு திரையரங்குகளே கிடைக்கும் என்பதாலும், குறைந்தது 400 திரையரங்குகளாவது வேண்டும் என்பதாலும், 3-வது முறையாக படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. அதன்படி, சூன் 23-ம் தேதி மாமனிதன் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.