தமிழீழம் போராட்டத்தின் பிந்தைய நிலையை பேசும் ஆறாம் நிலம்

இலங்கை தமிழர்கள் வாழ்க்கை, தமிழீழப் போராட்டம் இவற்றை பற்றிய திரைப்படங்கள், குறும்படங்கள் வெளி வந்திருக்கின்றன உண்மைநிலையை உலக மக்களுக்கு கொண்டு செல்லும் நேர்மையான படைப்புகளாக இல்லை என்பதே இலங்கை தமிழர்கள் கூறிவரும் குற்றசாட்டு அதனை போக்கும் வகையில்” ஆறாம் நிலம்” .எனும் பெயரில் திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. நேரடியாக ஓடிடியில் செப்டம்பர் 24ல் வெளியாகியுள்ள இப்படத்தின் பிரத்யேக காட்சி சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது

தமிழீழம் அமைய இலங்கையில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த ஆயுதப்போர் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் முடிவுக்கு வந்தது.

அந்த இறுதிப்போரின் போது இலட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் சிங்கள இராணுவத்தினரிடம் சரணடைந்தனர்.

அப்படிச் சரணடைந்தவர்களின் நிலை என்ன?

பனிரெண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் அவர்கள் நிலை என்ன? என்பதை இலங்கை அரசாங்கம் சொல்ல மறுக்கிறது.

சரணடைந்தவர்களைக் காணாமல் போனோர் என்றழைக்கின்றனர். அப்படிக் காணாமல் போனோரின் உறவுகள் ஆண்டுக்கணக்கில் போராடிக் கொண்டேயிருக்கிறார்கள்.

சிங்கள அரசாங்கம் அவர்களைக் கண்டுகொள்ளவேயில்லை. சர்வதேச சமூகமும் காண மறுக்கிறது.
ஏனெனில், காணாமல் போனோரின் உறவுகள் அனுபவிக்கும் சொல்லொணாத் துன்பங்கள் யாரும் அறியாததுதான்.

அவர்களின் துயரங்களைச் சிங்கள அரசுக்கும் சர்வதேசச் சமூகத்துக்கும் புரிய வைக்கும் முயற்சிதான் ஆறாம் நிலம் திரைப்படம் என்கிறார் இயக்குநர் ஆனந்த ரமணன்

கணவன் இல்லாமல் மனைவியரும் அப்பா இல்லாமல் குழந்தைகளும் தவிக்கும் தவிப்புகள் உலகத்துக்குச் சின்னவிசயம் சம்பந்தப்பட்டவர்களுக்கு உலகளவு கொடுமை என்பதை முகத்திலறைந்தாற்போல் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஆனந்தரமணன்.

போருக்குப் பின் அன்றாட வாழ்க்கைக்காக அவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள், அரசாங்க நிர்வாகிகள், உளவுத்துறையினர், இராணுவத்தினர் ஆகியோரால் பெண்கள் படும் அவஸ்தைகள் கண்களைக் கசியவைக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

முதன்மைப்பாத்திரத்தில் நடித்திருக்கும்     நவயுகாவும் அவருடைய பெண்குழந்தையாக நடித்திருக்கும் தமிழரசியும் மிகமிகப் பொருத்தமாக நடித்து காண்போரைக் கலங்கவைத்துவிடுகிறார்கள்.

அதுவும் அந்தக் குழந்தை, அப்பாவோடு துள்ளுந்தில் பயணிக்கும் குழந்தையுடன் கூடிய விளம்பரப்பலகைகளைப் பார்த்து ஏங்குவதும்,அவ்விளம்பரங்களில் காலத்துக்கேற்ப துள்ளுந்துகள் நவீனமாகிக் கொண்டே இருப்பதும் திரைமொழிக்கு அழகு.

படத்தில், கண்ணிவெடி அகற்றும் வேலைக்கு அவர்கள் போகிறார்கள், எப்போது அவை வெடிக்குமோ? என்ற பதற்றத்துடன் நாம் பார்க்கவேண்டியிருக்கிறது.

திரைப்பட இரசிகர்களுக்கு படம் மிக மெதுவாகப் போவது போல் தோன்றும். பார்த்துக்கொண்டிருப்பதையே தாங்கமுடியவில்லை அடுத்து பெரிதாக ஏதாவது நடந்துவிடுமோ? என்கிற பயம்தான் அப்படி உணரவைக்கும்.

ஈழதமிழ்ச் சமூகத்தின் மிகப்பெரும் வலியின் சிறுதுளிதான் இந்தப்படம்.சர்வதேசச் சமூகம் கண்கள் திறந்தாகவேண்டிய தருணம்.

பூ மீது யானை பூ வலியைத் தாங்குமா? என்கிற பாடல்வரிக்கேற்ப அமைந்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கிய ஆனந்த ரமணனுக்கும் அதைப் பொதுவெளியில் வெளியிடும் ஐபிசி தமிழ் இணையதளமும் இலங்கை தமிழர்கள் வரலாற்றில் தவிர்க்க முடியாதவர்களே..