கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு உத்தரவு, சுகாதாரப் பணிகள் என மத்திய, மாநில அரசுகள் செய்து வரும் பல்வேறு நடவடிக்கைகளைப் பலர் பாராட்டிய நிலையில் இதை விமர்சிக்கும் விதமாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சமீபத்தில் சில பதிவுகளை இட்டார்.
`உயிர் காக்க 21 நாள்கள் உள்ளிருக்கச் சொல்லும் நேரத்தில், அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க. பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம்” என்றும்
மேலும், “இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்குப் பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி, மக்களுக்கு உதவ நினைக்கிறேன்.
இன்று ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் தனிமைப்படுத்தல் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.
இதற்கிடையே, கமல் தற்போது அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “ஆழ்வார்பேட்டை முகவரியில் சில ஆண்டுகளாக நான் இல்லை என்பதும், அங்கு மக்கள் நீதி மய்யம் அலுவலகம் இருப்பதும் ஊர் அறிந்தது. எனினும் நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. கொரோனா வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் 2 வாரமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.
மாநகராட்சி சார்பில் ஏன் குழப்பம் ஏற்பட்டது என்பதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், கமலின் ஆழ்வார்ப்பேட்டை முகவரியில் தங்கியிருந்த முன்னாள் நடிகை ஒருவர் சமீபத்தில் வெளிநாடு சென்றுவந்துள்ளார். அதனால் அவரை தனிமைப்படுத்துவதற்காக அவர் பாஸ்போர்ட்டில் ஆழ்வார்பேட்டை முகவரி காண்பித்ததால் அங்கு சென்று நோட்டீஸ் ஒட்டினோம். பின்பு தவறுதலாக ஒட்டினோம் என்று தெரிந்தபின்பு நோட்டீஸை அகற்றிவிட்டோம்” எனத் தெரிவிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.