கொரோனாவுக்கு எதிராக மகேஷ்பாபு -அனுஷ்கா

கொரோனா அச்சுறுத்தலால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறது மனித இனத்தின் பெரும்பான்மையான பகுதி. இதுவரை எழுதப்பட்ட வரலாற்றிலேயே, மனிதன் எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்தாலே ஒரு பேரழிவைத் தடுத்துவிட முடியும் என்ற நிலையை கொரோனா உருவாக்கியிருக்கிறது. உதவி செய்வதற்காக வெளியில் வந்தால்கூட, அது கொரோனா பரவலுக்கு உதவக்கூடிய சூழலில், தங்களது உயிரைப் பணயம் வைத்து கொரோனாவுக்கு எதிராகப் போராடி மக்களின் உயிரைக் காத்து வருகின்றனர் மருத்துவத் துறையினர். அப்படிப்பட்ட மருத்துவத் துறையினருக்கு உலக சுகாதார தினத்தில் (ஏப்ரல் 7) நன்றியைக் கூறி, கொரோனாவைக் கட்டுப்படுத்த மேலும் செய்யவேண்டிய ஒன்றை நினைவுகூர்ந்திருக்கிறார் நடிகர் மகேஷ் பாபு.

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு மகேஷ் பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில் “இரண்டு வார லாக் டவுணை நாம் முழு பலத்துடன் கடந்திருக்கிறோம். அரசுகளின் முயற்சிகளைப் பாராட்டியே ஆக வேண்டும். தங்களது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் சாலைகளிலும், மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கும் வீரர்களைக் கண்டு பெருமையடைவதுடன் அவர்களால் ஈர்க்கப்பட்டிருக்கிறேன். சமூகத்திலிருந்து தனித்திருப்பது மற்றும் ஆரோக்கியத்துடன் இருப்பதைத் தாண்டி நாம் கவனிக்கவேண்டிய முக்கியமான ஒன்று இருக்கிறது. அது இந்தச் சூழலைப் பயன்படுத்தி நம்மிடையே பயத்தையும் நிலையற்ற தன்மையையும் உருவாக்கும் மனிதர்களிடமிருந்து முக்கியமாகத் தள்ளியிருக்க வேண்டும். இந்தக் காலக்கட்டத்தில் போலி செய்திதான் மிகப்பெரிய பிரச்சினை.

தவறான தகவல்களிலிருந்தும் உங்களைத் தள்ளியே வைத்திருங்கள். பாசிடிவ் எனர்ஜியையும், அன்பையும், நம்பிக்கையையும் விதையுங்கள். இந்தப் புயலையும் நாம் தாண்டிவிடலாம்” என்று கூறியிருக்கிறார். கொரோனா லாக் டவுண் காலத்தில் மகேஷ் பாபு கொடுத்த அறிவுரை இப்படியிருக்க,
அனுஷ்காவின் அறிவிப்பு இதை வேறு கோணத்தில் அமைத்திருக்கிறது.அனுஷ்காவின் அறிவிப்பில், “நாம் பிரிந்துவிட்டோம் என்று நினைத்தால் நாம் பிரிந்தே கிடப்போம். ஒற்றுமையுடன் இருக்கிறோம் என உணர்ந்தால் நாம் எழுந்து நிற்போம். இந்த உலகத்தையே புதிதாகப் பார்க்கிறோம். நமக்குத் தெரிந்ததாக நினைத்த பலவும் தெரியாமலேயே போய்விட்டது. எதுவெல்லாம் சாத்தியமில்லை என்று நினைத்தோமோ அவையெல்லாம் சாத்தியப்படுகிறது.
முடியும் என்று நினைத்ததெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. ஒரு நிமிடம் நீண்ட மூச்சை இழுத்து யோசித்துப் பார்த்தால் நேரம், இடம் ஆகியவற்றால் தூரமாக இருந்தாலும் ஒவ்வொருவரின் மனத்திலும் மற்றவருக்காக ஏங்கும் அன்பும், பிரார்த்தனையும் நம்மை ஒன்றாக இணைத்திருக்கிறது. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருக்கும் நமது அன்பு திசையறியாமல் சென்றுகொண்டே இருக்கிறது. வெளியிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் எந்த வார்த்தையின் மூலமும் நமது நன்றியைச் சொல்லிவிட முடியாது.
இதெல்லாம் முடிந்து நாம் வெளியே வரும்போது, ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மற்றவர் எந்தளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று உணர வேண்டும். நம்முடன் பழகிய ஒருவர் வெளியில் சென்று கொரோனாவுடன் வந்திருந்தாலும் நாமும் பாதிக்கப்பட்டிருப்போம். அப்படிச் செல்லாமல் நமது உயிரைக் காப்பாற்றிய அவர்களும் நமது வாழ்வில் முக்கியமானவர்கள்தான். யாரும் யாரையும்விட தாழ்ந்தவரோ, உயர்ந்தவரோ கிடையாது என்பதை இந்தக் காலம் உணர்த்தியிருக்கிறது. மனிதர்களாக மனிதத்தின் மீதான நமது கடமையை நாம் சரியாகச் செய்யும்போது, அந்த மனிதம் இந்த உலகத்தையே மாற்றியமைக்கிறது” என்று ஆழ்ந்த சிந்தனையுடன் ஒரு கடிதத்தை வெளியிட்டிருக்கிறார் அனுஷ்கா.