மம்முட்டியுடன் இணையும் ராஜ்கிரண்

பேரன்பு திரைப்படத்தைத் தொடர்ந்து மம்மூட்டி தமிழில் நடித்துள்ள குபேரன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதன் காரணமாக அவர் தமிழகத்திலும் தனக்கெனத் தனி ரசிகர் கூட்டத்தைப் பெற்றார். 2010-ஆம் ஆண்டு வெளியான வந்தே மாதரம் திரைப்படத்திற்குப் பின்னர் வேறு எந்த தமிழ் படத்திலும் அவர் நடிக்கவில்லை. இந்த நிலையில் பத்து வருடங்களுக்குப் பின்னர் அவர் கதாநாயகனாக நடித்த ‘பேரன்பு’ திரைப்படம் தமிழில் வெளியானது.

விமர்சன ரீதியாக பெரும் பாராட்டுகளையும், பல விருதுகளையும் பேரன்பு திரைப்படம் வாங்கிக் குவித்தது. இந்தத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர் நடித்த மாமாங்கம் திரைப்படமும் தமிழில் வெளியிடப்பட்டது. இந்தநிலையில் அவர் நடித்துள்ள மற்றொரு திரைப்படமும் தமிழில் வெளியாகவுள்ளது.

குபேரன் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப்படத்தின் டீசர் இன்று(ஜனவரி 15) வெளியிடப்பட்டுள்ளது. அதிரடி ஆக்‌ஷனில் மம்மூட்டி களமிறங்கியிருக்கும் அந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் ராஜ் கிரண், மீனா, கலாபவன் ஷாஜோன், சித்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டீசரில் மம்மூட்டி பேசும் ‘மவனே, கொலை காண்டில இருக்கேன்…கொல்லாம விட மாட்டேன்’ என்னும் ரஜினிகாந்த் வசனம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

மலையாளத்தில் இந்தப்படத்திற்கு ஷைலாக் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அஜய் வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.