விஜய் சேதுபதிக்கு ஆதரவு கரம் நீட்டிய முத்தையா முரளிதரன்

எனது பயோபிக்கில் நடிக்க நீங்கள் தான் மிகச்சரியான, தரமான ஆள் என முத்தையா முரளிதரன் விஜய் சேதுபதியிடம் கூறியதன் பின்னணியை நடிகர் பகிர்ந்துள்ளார்.

பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் தொடர்ந்து தயாராகி வருகின்றன. குறிப்பாக விளையாட்டு வீரர்களின் படங்கள் அதிகளவில் வெளியாகின்றன. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு ‘800’ என்ற பெயரில் புதிய படம் உருவாகவுள்ளது

 சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் முதன்முறையாக 800 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றவர் இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ளமுத்தையா முரளிதரன். அதைக் குறிக்கும் விதமாகவே படத்துக்கு 800 எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில், விஜய் சேதுபதி இப்படத்திலிருந்து விலகியதாக செய்திகள் வந்த நிலையில், விஜய் சேதுபதி அதனை வதந்தி எனக் கூறி படத்தில் தான் இருப்பதை உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், சமீபத்திய நேர்காணலில், விஜய் சேதுபதி தான் இந்த படத்தில் இருப்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் படத்திற்காக தான் உடல் ரீதியாக தயாராகி வருவதாகவும் கூறியுள்ளார். படம் பற்றி பேசிய அவர், “நான் கிரிக்கெட்டைக் கூட பார்த்ததில்லை. எனக்கு உடனடியாக போரடித்துவிடும் என்பதால் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட்டைப் பார்க்கும் பழக்கமில்லை. உண்மையில் நான் முத்தையா முரளிதரன் சாரிடம் கூட இதைச் சொன்னேன். உடனடியாக அவர் சொன்னார், எனது பாத்திரத்தை ஏற்க மிகச்சரியான, தரமான ஆள் தான் நீங்கள்!”எனக் கூறியதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

இப்படத்திற்கான முன்தயாரிப்பு பற்றி பகிர்ந்து கொண்ட விஜய் சேதுபதி, கதாபாத்திரத்திற்காக தனது எடையை குறைக்க படக்குழு அவருக்கு ஒரு சிறப்பு பயிற்சியாளரை நியமித்துள்ளதாக தெரிவித்தார். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் உள்ள அனைத்து விஷயங்களும் மனச்சோர்வை ஏற்படுத்துவதாகவும், இது தன்னை அதிகமாக சாப்பிட வைப்பதாகவும் கூறியுள்ளார்

ராணா டகுபதியின் சுரேஷ் புரொடக்ஷன்ஸின் கீழ் தயாரிக்கப்படவுள்ள இப்படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கவுள்ளார்.