நாயகிக்கு வேலையில்லாத சென்னை பழனி மார்ஸ்

விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் – ஆரஞ்சு மிட்டாய் புரொடக்சன்ஸூடன் இணைந்து தயாரித்துள்ள ‘சென்னை பழனி மார்ஸ்’ படம். இப்படத்தின் இயக்குநர் பிஜூ படம் உருவான விதம், புதுமுக நடிகர்களுக்கான பயிற்சி, கதையின் உள்நோக்கம், கதைக்கான உத்வேகம் பற்றி மனம் திறந்துள்ளார்.

“நான்கு சண்டைக்காட்சிகள் கொண்ட ஹீரோயிஸமான படங்களும் இங்கு வேண்டும். ‘சென்னை பழனி மார்ஸ்’ மாதிரி புதுமுகங்கள் நடித்த படங்களும் வேண்டும். எல்லாவிதமான படங்களும் வரும்போதுதான் மக்களுக்கு சினிமா பார்க்க வேண்டும் என்ற ஆவல் வரும். நண்பர்கள் இருவர் சேர்ந்து சென்னையிலிருந்து பழனி வழியாக மார்ஸ் செல்ல முயற்சி செய்கிறார்கள். அது ஒரு தந்தையின் கனவாக இருந்தது. தந்தையைத் தொடந்து அவரது மகன் அந்தக் கனவை நூல் பிடித்துப் போகிறான். அவனுடன் நண்பனும் சேர்ந்துகொள்ள பயணம் சென்னையிலிருந்து பழனியை நோக்கித் தொடங்குகிறது.

இவர்களின் கனவும், பயணமும் மற்றவர்களால் எப்படி பார்க்கப்படும்? அதிலுள்ள சுவாரஸ்யங்களும், காமெடியும் தான் படமே. அவர்கள் மார்ஸ் போனார்களா, அவர்களது பயணம் என்ன ஆனது என்பது கிளைமாக்ஸ்.

ஒளியின் பயண வேகம் நொடிக்கு பல லட்சம் கிலோ மீட்டர் என்று சொல்லுவார்கள். அந்த வேகத்தில் பயணித்தால் கூட இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் சில பகுதிகளை சென்று அடைவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிட்டு உள்ளார்கள். அதுமட்டுமன்றி ராமாயணத்தில் வந்த புஷ்பக விமானம் பற்றி படித்தபோதும் இவை எல்லாவற்றையும் ஒன்றிணைத்து ஒரு படமாக உருவாக்கும் எண்ணம் தோன்றியது. அதன் விளைவாக உருவானது தான் இந்தக் கதை.

மார்ஸை நோக்கிய பயணம் என்பதால் இது சயின்ஸ் பிக்சன் படமோ அல்லது கிராஃபிக்ஸ் காட்சிகள் நிறைந்த காலச்சக்கர பயணம் குறித்த படமோ அல்ல.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும் இல்லையா..? சிலரிடம் அதை சொன்னால் நம்ப கூட மாட்டார்கள்.. ஆனால் நமது கனவை நோக்கி விடாமுயற்சியுடன் முயற்சித்தால் அதை அடையலாம் என்பதை தான் இந்த படத்தின் மூலம் சொல்ல முயற்சித்து இருக்கிறோம்.

முனிவர்கள் சித்தர்கள் காலத்திலேயே இப்படி எண்ணங்கள் மூலமாக பயணம் செய்திருக்கும் நிறைய செய்திகள் உண்டு. ராவணன் நினைத்ததும் புஷ்பக விமானம் வந்து நின்றதாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இங்கே புஷ்பக விமானம் என்பது கூட அவரது சிந்தனை தான்.

பத்து வருடங்களுக்கு முன்பு வாட்ஸ் ஆப், எஸ்.எம்.எஸ் மூலமாக உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் இன்னொரு நபருக்கு செய்தி அனுப்ப முடியும் என சொல்லி இருந்தால் நீங்கள் நம்பி இருப்பீர்களா..? ஆனால் அது இப்போது சாத்தியமாகி இருக்கிறது. கனவு ஜெயிக்க வேண்டுமென்றால் அதை நோக்கி தொடர்ந்து பயணப்படுங்கள் என்பதையே இப்படம் உங்களுக்கு செய்தியாகச் சொல்லும்.

பிரவீண் ராஜா, ராஜேஷ் கிரி பிரசாத், வசந்த் மாரிமுத்து, இம்தியாஸ் முகமது, வின் ஹாத்ரி, பாரி இளவழகன் ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமாகின்றனர்.

இவர்களுடன் மதன்குமார் தக்சிணா மூர்த்தி, ஏ. ரவிகுமார், ஆல்வின் ராமைய்யா, ஆர். கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தக் கதைக்கு கதாநாயகி தேவைப்படவில்லை. ட்ராவல் படம் என்பதால் மொத்தம் ஏழு பாடல்கள் இருக்கின்றன. சில பாடல்கள் மாண்டேஜ் காட்சிகளாக இருக்கும்.

பாடல்களை விக்னேஷ் ஜெயபால் எழுதியிருக்கிறார். நிரஞ்சன் பாபு இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். படத்தின் மூன்று பாடல்களை நாயகர்களில் ஒருவரான ராஜேஷ் கிரி பிரசாத்தே பாடியுள்ளார். இந்தப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி என்பதால் நடிப்பு பயிற்சிக்காக கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் ஒர்கஷாப் நடத்தினோம்.

ஒரு சிறிய பட்ஜெட் படத்தை இன்றைய காலகட்டத்தில் ரிலீஸ் செய்வது என்பது எவ்வளவு சவாலான விஷயம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த படத்தின் கதை பற்றி ஏற்கனவே நடிகர் விஜய்சேதுபதிக்கு நன்கு தெரியும். அவரது ஒத்துழைப்பு முக்கியமானது. படத்தின் ஆடியோ வெளியாகி உள்ளது.. படம் வரும் ஜூலை மாதத்தில் வெளியாக இருக்கிறது” எனக் கூறினார் இயக்குநர் பிஜூ.