இந்தியில் தயாராகும் சூரரைப் போற்று அதிகாரபூர்வ அறிவிப்பு

சுதாகொங்கரா இயக்க, சூர்யா, மோகன்பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்த ‘சூரரைப் போற்று திரைப்படம் 2020 நவம்பர் 12 ஆம் தேதி ஓடிடியில் வெளியானது.

எளிய மக்களும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற தனது இலட்சியத்தை அடைய ஒரு சாதாரண மனிதன் உலக பெரு முதலாளிகளுடன் நடத்திய போராட்டமே சூரரைப் போற்று.

ஏர் டெக்கான் நிறுவனத்தின் அதிபர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ‘சூரரைப் போற்று’ திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது

கோல்டன் குளோப்பின் 78வது விருது வழங்கும் நிகழ்வில் பத்து இந்திய மொழி திரைப்படங்கள் மட்டும் திரையிடப்பட்டன. அதில் சூரரைப் போற்று திரைப்படமும் ஒன்று. மேலும் 93 ஆவது ஆஸ்கர் அகாடமி விருதுக்கான போட்டியிலும் சூரரைப் போற்று திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐஎம்டிபி தளம் தொடங்கப்பட்ட கடந்த முப்பது ஆண்டுகளில் 9.1 சதவீதம் அளவிற்கு அதிக மதிப்பெண்களைப் பெற்ற ஒரே இந்திய மொழித் திரைப்படம் சூரரைப் போற்று மட்டுமே.

சஷாங் ரிடம்ஷ்ன்,காட் பாதர்என்ற உலகத் திரைப்பட வரிசையில் மூன்றாவதாக சூரரைப் போற்று படம்இடம்பெற்றுள்ளது.

இத்தகைய பெருமைகள் வாய்ந்த சூரரைப் போற்றுதிரைப்படம், இந்தியிலும் வெளிவர இருக்கிறது. தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இந்தியிலும் இயக்க உள்ளார்சூரரைப் போற்று இந்தித் திரைப்படத்தை சூர்யாவின் 2D என்டெர்டெய்ன்மென்ட் மற்றும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந்தி மொழிமாற்று குறித்து நடிகர் சூர்யா பேசுகையில் கூறும்போதுசூரரைப் போற்று திரைப்படத்திற்குக் கிடைத்த அன்பும், பாராட்டும் இதுவரை பார்த்திராதது. இந்தக் கதையை நான் கேட்டது முதலே இது தென்னக ரசிகர்களுக்கான படமாக மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கான படமாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஏனெனில் அந்தக் கதையில் ஜீவன் அத்தகைய வலிமை வாய்ந்ததாக இருந்தது.

உழைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உத்வேகம் தரும் கேப்டன் கோபிநாத்தின் கதையை இந்தியில் தயாரிப்பதும், தரமான படங்களைத் தொடர்ந்து தந்து வரும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பதும் எனக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகிறதுஎன சூர்யா தெரிவித்தார்.

அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான விக்ரம் மல்ஹோத்ரா கூறும்போது, மக்களிடம் நிரந்தரமான தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகள் மீது எங்களுக்கு எப்போதுமே ஈடுபாடு உண்டு பொழுதுபோக்கைத் தாண்டி மக்களுக்கு ஏதாவது தரவேண்டும் என்பதையே எங்கள் நிறுவன திரைப்படங்கள் எப்போதும் முயற்சித்து வருகின்றன.

சூரரைப் போற்று திரைப்படம் நிகழ்த்தியுள்ள மாயாஜாலத்தை இந்தி ரசிகர்களுக்கும் கொண்டு செல்வதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி குறிப்பாக, சூர்யா, ஜோதிகா, ராஜசேகர் ஆகியோருடன் இணைவது எங்களுக்கு பெரும் உற்சாகத்தை தருகிறது இதுபோன்ற உயர்த்தரமான படைப்புகளை தொடர்ந்து தந்து ரசிகர்களை மகிழ்விப்போம் என்று நம்புகிறேன். இயக்குநர் சுதாவை இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராக நாங்கள் மதிப்பிடுகிறோம். அவருடன் பணியாற்றுவதும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தக் கதையை உலகம் முழுதும் இருக்கும் ரசிகர்களுக்கு அவர் எப்போது தருவார் என்பதைப் பார்க்க நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.