காற்றில் கலந்த கானக்குரல் மண்ணில் மறைந்தது பூத உடல்

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல் களை பாடி தனது கானக்குரலால் இசை ரசிகர்களை கட்டி போட்டவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (வயது 74). சங்கீத உலகில் பல சாதனைகளை படைத்த இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.சென்னை சூளைமேட்டில் உள்ள எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சைக்கு பின்னர் கடந்த 4-ந்தேதி கொரோனாவில் இருந்து குணம் அடைந்தார். அதன்பின்னர் அவர் உடல்நலம் தேறி வந்தார்.

கடந்த 24-ந்தேதி திடீரென்று அவருடைய உடல்நிலை மீண்டும் மோசம் அடைந்தது. மிகவும் கவலைக்கிடமான நிலையில் உயிர் காக்கும் கருவிகள் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் அவருக்கு நேற்றுமுன்தினம் மதியம் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது. அவர் 52 நாட்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.
மரணம் அடைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் நேற்றுமுன்தினம் மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை வைக்கப்பட்டது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் அடக்கம் சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே அவரது உடல் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனம் மூலம் நேற்றுமுன்தினம் இரவே பண்ணை வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. அவருடைய உடல் எடுத்து செல்லப்பட்டபோது நுங்கம்பாக்கத்தில் இருந்து தாமரைப்பாக்கம் வரை வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு நின்று அஞ்சலி செலுத்தினார்கள். அவரது உடல் வைக்கப்பட்ட பண்ணை வீட்டின் வெளியே இரவு முழுவதும் அவரது ரசிகர்களால் இசை அஞ்சலி நடத்தப்பட்டது.இந்தநிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நேற்று காலை அவரது பண்ணை வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அவருடைய உடலுக்கு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், ஆந்திர மாநில மந்திரி அனில் குமார் யாதவ், பூந்தமல்லி எம்.எல்.ஏ . கிருஷ்ணசாமி, ஆந்திர எம்.எல்.ஏ.க்கள் 3 பேர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி, செங்கல்பட்டு சரக ஐ.ஜி.நாகராஜன், காஞ்சீபுரம் சரகடி.ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி, போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், நடிகர்கள் விஜய், அர்ஜூன், ரகுமான், மயில்சாமி, பிரேம்ஜி, இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், பாடகர் மனோ உள்பட பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.அவருடைய ரசிகர்களும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினார்கள். சென்னையை சேர்ந்த ரசிகர்கள் மட்டுமின்றி பல ஊர்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் அவருடைய இசை ரசிகர்கள் வந்திருந்தனர்.
அஞ்சலி முடிந்தவுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு இறுதிச்சடங்கு சம்பிரதாயங்கள் நடைபெற்றன. புரோகிதர்கள் மந்திரம் முழங்க அவருடைய மகன் எஸ்.பி.பி.சரண் இறுதிச்சடங்குகளை மேற்கொண்டார்.போலீஸ்மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி இறுதிச்சடங்குகள் முடிந்தவுடன் போலீஸ் மரியாதையுடன் உடல் அடக்கம் நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்ட ஆயுதப்படை உதவி கமிஷனர் திருவேங்கடம் தலைமையில் 24 போலீசார் அணிவகுத்து நின்று, வானத்தை நோக்கி தலா 3 முறை சுட்டனர். 72 குண்டுகள் முழங்க அவரது உடல் பிற்பகல் 12.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

அப்போது ‘எஸ்.பி.பி. வாழ்க’ என்று ரசிகர்கள் கண்ணீர் மல்க கோஷம் எழுப்பினர். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் புதைக்கப்பட்டதும், எஸ்.பி.பி.சரண் உள்ளிட்ட அனைவரும் பண்ணை வீட்டுக்கு திரும்பினர். ஆனால் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த இடத்தில் நீண்ட நேரம் அவரது மனைவி சாவித்திரி சோகத்துடன் அமர்ந்திருந்தார். பின்னர் அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி அழைத்துசென்றனர்.