ஆத்தா நயன்தாராவுக்கு என்னாச்சு

நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகெண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியிருக்கின்றன. அறிவிப்புக்காக வெளியிட்ட போஸ்டரிலிருந்து, தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டர்கள் வரை ரசிகர்களின் மனதைக் கவர்ந்திருக்கிறது. அதேசமயம், அவை சிறு குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

அறிவிப்பு போஸ்டரில் நயன்தாராவின்; அதாவது மூக்குத்தி அம்மனின் கைகள் மட்டும் தெரியும்படி டிசைன் செய்யப்பட்டிருந்தது. அதேசமயம், அம்மனுக்கு எதிரில் சில ரவுடிகள் ஓடிவருவது போன்ற காட்சியும் அதில் இடம்பெற்றிருந்தது. இதனை வைத்துப் பார்க்கும்போது, செமயான ஆக்‌ஷன் காட்சிக்கு அம்மன் தயாராகிறார் என்பது தெரிந்தது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், அம்மனின் ஒரு பக்க முகத்தை மட்டும் வெளிக்காட்டி, கிரீடம் மற்றும் இதர அலங்காரங்களுடன் நயன்தாரா இடம்பெற்றிருந்ததைக் கண்ட ரசிகர்கள் ‘ஆத்தா தரிசனம் தந்துட்டா’ என்று மகிழ்ந்தனர். ஆனால், ஒரு பக்க முகத்தை மட்டும் பார்க்கமுடிந்ததால் பலரும் சோகத்தில் ஆழ்ந்து புகார் கூறினர்.
ரசிகர்களின் சோகத்தைப் புரிந்துகொண்ட படத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஆர்.ஜே.பாலாஜி 8 மணிக்கு செகெண்ட் லுக் போஸ்டர் ரிலீஸாகும் என அறிவித்தார். இதில் எப்படியும் நயன்தாராவின் முழு அம்மன் தோற்றத்தைப் பார்த்துவிடலாம் என ரசிகர்கள் காத்திருக்க, எதிர்பார்த்தது போலவே நயன்தாராவின் முழுத் தோற்றம் அடங்கிய போஸ்டர் ரிலீஸானது.

தங்க கிரீடம், மாங்காய் டிசைன் அமைந்த நெக்லஸ், கழுத்து முழுவதும் நிறைந்த ஆரம் மற்றும் இதர நகைகள், கையில் திரிசூலம் என இதுவரை அம்மன் வேடம் தரித்த நடிகைகள் பலருக்கும் சவால்விடும் விதத்தில் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் தோற்றம் அமைந்திருக்கிறது.

ஆனால், அம்மன் ஏன் சோகமாக இருக்கிறார் எனத் தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

அம்மனுக்கு எதிரில் ரவுடிகள் நிற்பது அறிவிப்பு போஸ்டரிலேயே தெரிந்தது. நியாயமாக ரவுடிகளை பார்வையிலேயே எரித்துவிடுவது போல ரௌத்திரம் நிறைந்த பார்வையுடன் நயன்தாராவின் தோற்றம் இருந்திருக்கவேண்டும். ஆனால், நயன்தாராவின் முகத்திலோ முழுக்க முழுக்க சோகம் நிறைந்து காணப்படுகிறது. அப்படி என்னவொரு சூழலில் இந்தக் காட்சியைப் படமாக்கியிருக்கிறார்கள் என்று தெரியவில்லையே என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

துரத்திவரும் ரவுடிகளை துவம்சம் செய்யும் ஆக்‌ஷன் அம்மனாக இல்லாமல், பயந்து எஸ்கேப் ஆகும் காமெடி அம்மனாக இருப்பாரோ என்று கமெண்ட் செய்துவருகின்றனர் ரசிகர்கள். அப்படி எதுவாக இருந்தாலும் அதனை டிரெய்லர் வரும் வரை காத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரித்திருக்கும் இந்தத் திரைப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் ஆகிய இருவரும் இணைந்து இயக்கியிருக்கின்றனர். ஆர்.ஜே.பாலாஜி முக்கிய வேடத்திலும் நடித்திருக்கிறார்.