கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் திரைப்படப் படப்பிடிப்புகளும் இரத்து செய்யப்பட்டிருந்தன. தற்போது ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதால் ஒருசில மாநிலங்களில் திரைப்படப் படப்படிப்புகளை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தொடங்க அந்தந்த மாநில அரசுகள் அனுமதியளித்துள்ளன.
அதன்படி, மகாராஷ்டிர மாநிலத்தில் கடும் நிபந்தனைகளுடன் அம்மாநில அரசு திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதியளித்திருந்தது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன.
அதில் சமூக இடைவெளியைக் கண்டிப்பாகக் கடைபிடிப்பது, படப்பிடிப்பில் குறைவானவர்களே கலந்துகொள்வது, 65 வயதான நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் படப்பிடிப்புக்கு வரக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில் மகாராஷ்டிர அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து நடிகர் பிரமோத் பாண்டே, ஜூலை 21 அன்று மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கு நேற்று (ஆகஸ்ட் 7) விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், ”மற்ற தொழில்கள் செய்ய எல்லா வயதினரும் அனுமதிக்கப்பட்டுள்ளபோது, நடிப்பதற்கு மட்டும் வயதானவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது சரியல்ல” என்று கூறினர். இந்த விசயத்தில் அரசின் முடிவு பாரபட்சமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் 65 வயதுக்கு மேற்பட்ட நடிகர்களுக்கு படப்பிடிப்பில் கலந்துகொள்ள விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மும்பை நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் (IMPPA) வரவேற்றுள்ளது.
தமிழகத்தில் திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. அப்படியே கொடுத்தாலும் இங்கும் 65 வயதினருக்கு மேற்பட்டவர்கள் நடிக்கக் கூடாது என்கிற நிபந்தனை வைத்தால் கமல், ரஜினி உள்ளிட்ட பலர் நடிக்க முடியாமல் போகும் என்று பேச்சு இருந்தது.
இப்போது மும்பையிலேயே அந்தத் தடை நீங்கிவிட்டதால் கமல்,ரஜினி உள்ளிட்டோருக்குச் சிக்கல் இல்லை என்று பேசிக்கொள்கிறார்கள்.
Next Post