ஆடியோ விழாவில்அரசியல் பேச தயாராகும் விஜய்

சிங்கிள் பாடல்கள் வெளியீடு, ஐடி ரெய்டு ஆகியவற்றின் மூலம் புரமோஷனைத் தொடங்கி முழு வேகத்தில் ஏப்ரல் ரிலீஸை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது மாஸ்டர் திரைப்படம்.

படத்துக்கான எதிர்பார்ப்புக்கு லோகேஷ் கனகராஜின் கைதி வெற்றி, விஜய் – விஜய் சேதுபதி கூட்டணி, மாளவிகா மோகனனின் சிறப்பான நடிப்பு எனப் பல காரணங்கள் இருந்தாலும் இசை வெளியீட்டு விழாவைப் பொறுத்தவரையில் படத்தின் பாடல்களைவிட விஜய் என்ன பேசப் போகிறார் என்பதுதான் நிகழ்ச்சியின் எதிர்பார்ப்புக்குக் காரணமாக இருக்கிறது.

இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசப் போகிறார் என்று ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் தனது பேச்சு இருக்க வேண்டும் என்பதற்காக விஜய்யும்

சில ஏற்பாடுகளைச் செய்துவருகிறார்.
இதன் முதல்கட்டமாகப் படக்குழுவினரில் யாரெல்லாம் நிகழ்ச்சிக்கு வருகிறார்கள் என்பதையும், யாரெல்லாம் மேடை மீதேறி பேசப் போகிறார்கள் என்ற பட்டியலைக் கேட்டிருக்கிறார்.

படத்தில் தன்னுடன் நடிக்கும்போது மிக நெருங்கியவர்களாக மாறிவிட்டவர்களுக்கு போன் செய்து, நிகழ்ச்சியில் என்ன பேசப் போகிறீர்கள் என்பது குறித்து மேலோட்டமாகக் கேட்டறிந்து அதற்கேற்ப தனது பேச்சை வடிவமைக்க முடிவு செய்திருப்பதாகக் கூறுகின்றனர் படக்குழுவினர். விஜய்யுடன் நடித்துள்ள நடிகர் ஒருவர் ‘நீங்களே வேண்டாம் என்றாலும் அரசியல் பத்தி பேசுவேன்’ எனக் கூறியதற்கு, ‘நீங்க என்ன பேசக் கூடாது என்று கட்டுப்படுத்த நான் இதைக் கேட்கவில்லை.

நீங்கள் பேசுவதற்கு நான் பதில் சொல்லாமல் விட்டுவிடக் கூடாது என்பதால் தான் கேட்கிறேன்” என்று விஜய் கூறியதாக ஏற்கனவே கோடம்பாக்கத்தில் செய்தியை உலவவிட்டிருக்கின்றனர்.

விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தின் படக்குழுவினர் அனைவரது பேச்சுக்கும் விஜய் பதிலளிக்கப் போகிறார் என்கின்றனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.