தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2019ஆம் வருடம் ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் செல்லாது என்றும், மூன்று மாதத்திற்குள் மறுதேர்தல் நடத்தவேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
நடிகர்கள் திரைப்படத்தில் ஆக்ஷன் காட்டி எத்தனையோ படங்களில் மக்கள் பார்த்திருப்பார்கள். ஆனால், நடிகர்களுக்குள்ளாகவே ஆக்ஷன் காட்சிகளும் திருப்புமுனையும் ஏற்பட்டது சரத்குமார் தலைமையிலான அணியும், விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்ட 2015 நடிகர் சங்கத் தேர்தலில்தான்.
இந்தப் பிரச்னை நீதிமன்றத்துக்குச் சென்றபோது, ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் மேற்பார்வையில் தேர்தல் நடத்தப்படவேண்டும் என உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். அதன்படியே தேர்தல் நடைபெற்று முடிந்தாலும், பல்வேறு குளறுபடிகள் தேர்தலில் நடைபெற்றிருக்கிறது என நடிகர் சங்க உறுப்பினர்களான பெஞ்சமின் மற்றும் ஏழுமலை ஆகிய இருவரும் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், உடனடித் தீர்ப்புக்கு வழியில்லை என்பதால் வாக்கு எண்ணிக்கையை தடை செய்துவிட்டு, நீதிமன்றத்தின் சார்பில் தனி அதிகாரியாக கீதா என்பவரை நியமித்து, சங்கத்தின் நிர்வாக மேற்பார்வையை நடத்த வழிசெய்தது.
எனவே, மூன்று மாதத்திற்குள் நடிகர் சங்க உறுப்பினர்கள் பட்டியலை சரிபார்த்து, அதனடிப்படையில் தேர்தலை நடத்தவேண்டும் என்றும், இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல் தாஸ் அவர்கள் நியமிக்கப்படுகிறார் என்றும், அதுவரை நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி கீதா அவரது பதவியில் இருந்து நிர்வாகத்தை கவனிக்கலாம் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இரு தரப்பும் நீதிமன்ற தீர்ப்பு ஆவணமாக கைக்கு வரட்டும் என்று காத்திருக்கும் அதேசமயம், விஷால் தலைமையிலான அணியினர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கான பணிகளையும் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர்